Archives: ஜூலை 2022

“உங்களுக்கு சொந்தமாக்குங்கள்!"

ஜூன் 11, 2002 அன்று, “அமெரிக்கன் ஐடல்” என்னும் பாடும் போட்டி துவங்கியது. ஒவ்வொரு வாரமும், பங்கேற்றவர்கள் பிரபலமான பாடல்களில், தங்கள் சொந்த வரிகளில் பாடினார்கள். பார்வையாளர்கள், போட்டியின் அடுத்த சுற்றுக்கு யார் முன்னேறினார்கள் என்று வாக்களித்தனர்.

நிகழ்ச்சி நடுவர்களில் ஒருவரான, ராண்டி ஜாக்சன், “நீங்கள் அந்தப் பாடலை உங்களுடைய சொந்த பாடலாக்கிக்கொண்டீர்கள்” என்று அவர்களைப் பாராட்டுவது வழக்கம். ஒரு பாடகர், ஒரு பழக்கமான ட்யூனை எடுத்து, அதை கற்றுக்கொண்டு, அதை ஒரு தனித்துவமான புதிய வழியில் பாடியபோது அவர் அந்தப் பாராட்டுகளுக்கு பாத்திரமானார். “அதைத் தனக்கென  சொந்தமாக்கிக்கொள்ள" அதை முழுமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் சொந்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். பின்னர், அதை மேடையில் உலகிற்கு வெளிப்படுத்தலாம்.

நம்முடைய விசுவாசத்தையும் அதை பிரதிபலிப்பதையும் சொந்தமாக்கிக் கொள்ளும்படியான ஒன்றைச் செய்ய பவுல் நம்மை அழைக்கிறார். பிலிப்பியர் 3இல், தேவனுக்கு முன்பாக நீதிமானாய் இருப்பதற்கான முயற்சிகளை அவர் நிராகரிக்கிறார் (வச. 7–8). மாறாக, “கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து," வாழ அவர் நமக்குக் கற்பிக்கிறார் (வச. 9). மன்னிப்பு மற்றும் மீட்பின் பரிசு நமது உந்துதலையும் இலக்குகளையும் மாற்றுகிறது: “கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்" (வச. 12).

இயேசு நம் வெற்றியை உறுதிப்படுத்துகிறார். நம் வேலை? அந்த உண்மையை அறிந்துக்கொண்டு, தேவனின் வசனத்தை நாம் உள்வாங்கி, உடைந்த நம் உலகத்தின் மத்தியில் வாழவேண்டும். அதாவது, நாம் நமது விசுவாசத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் “நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக" (வச. 16) என்று வலியுறுத்துகிறார்.

 

சூரிய ஒளி வட்டம்

அது ஒரு வெப்பமான கோடை நாள். நானும் எனது நான்கு வயது பேத்தி ரிதுவும் பந்து விளையாடுவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வராந்தாவில் கண்ணாடி கோப்பையில் தண்ணீருடன் அமர்ந்திருந்தபோது, ரிது முற்றத்தைப் பார்த்து, “சூரிய ஒளி தரையில் படுவதைப் பாருங்கள்” என்றாள். இருண்ட நிழல்களுக்கு மத்தியில் ஒளியின் வட்டத்தை உருவாக்க சூரிய ஒளி அழகாய் ஊடுருவுகின்றது. 

சூரிய ஒளி வட்டம். இருண்ட நாட்களில் நம்பிக்கையைத் தேடுவதற்கு இது ஒரு அழகான படம் அல்லவா? பெரும்பாலும் சவாலான நேரங்களின் மத்தியில், நிழல்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஒளியின் மீது கவனம் செலுத்துவது சிறந்தது. 

அந்த ஒளிக்கு ஒரு பெயர் உண்டு - இயேசு. இயேசு மாம்சத்தில் வந்தபோது, உலகில் உதித்த பிரகாசத்தை விவரிக்க மத்தேயு ஏசாயாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்: “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது” (மத்தேயு 4:16; ஏசாயா 9:2ஐயும் பார்க்கவும்). “மரண இருளில்” நாம் வாழும்போது, பாவத்தின் விளைவுகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. ஆனால் அந்த இருளை பிரகாசிபிக்கிறவர், உலகின் மகத்தான மற்றும் புகழ்பெற்ற ஒளியான இயேசு (யோவான் 1:4-5).

“சூரிய ஒளியின் வட்டங்கள் மின்னுவது போல” இயேசுவின் அன்பு மற்றும் இரக்கத்தின் ஒளி,  நம் இருளில் ஊடுருவி, நம் நாளை ஒளிரச் செய்யவும், நம் இதயங்களை நம்பிக்கையுடன் பிரகாசிக்கவும் செய்கிறது.

தேவனுடைய நன்மைகளைத் தொடர்ந்து..

எனது கல்லூரி நாட்களில், பெண்கள் துணிக்கடையில் நான் பகுதி நேர வேலை பார்த்தேன். அங்கு பொருட்கள் வாங்க வந்த சிலரை சந்தேகப்பட்ட கடையின் பெண் பாதுகாவலர் ஒருவர், அவர்கள் கடையில் பொருட்களை திருடியிருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டு பின் தொடர்ந்தார். அந்த கடையின் உரிமையாளருடைய பார்வையில் சந்தேகிக்கக்கூடியவர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். அவருடைய பார்வையில் நல்லவர்களாய் தெரிந்தவர்களை விட்டுவிட்டனர். சில கடைகளில் சந்தேகப்பட்டு, என்னையே பின்தொடர்ந்திருக்கின்றனர். அதினுடைய நுணுக்கங்களை இப்பொழுதும் நான் அறிந்துள்ளதால் அது ஒரு  சுவாரஸ்யமான அனுபவத்தையே கொடுத்தது.

இதற்கு நேர்மாறாக, தாவீது, தன்னை இரண்டு தெய்வீக ஆசீர்வாதம் பின்பற்றுவதாக அறிவித்தார். அவை கர்த்தரின் நன்மையும் கிருபையுமே. இந்த இரண்டு வரங்களும் எப்போதும் மெய்யான அன்போடு அவருடன் இருக்கும். “காக்கும் இரண்டு தூதர்கள்" என்று சுவிசேஷகர் சார்லஸ் ஸ்பர்ஜன் குறிப்பிடும் கர்த்தருடைய தூதர்கள், இருண்ட நாட்களிலும் பிரகாசமான நாட்களிலும் தேவனை விசுவாசிப்பவர்களின் கூடவே இருப்பார்கள். மந்தமான குளிர்கால நாட்களிலும் பிரகாசமான கோடைகால நாட்களிலும், அவருடைய நன்மை நம் தேவைகளை பூர்த்தி செய்கிறது. அவருடைய கிருபை நம் பாவங்களை மூடுகிறது.

ஒரு காலத்தில் மேய்ப்பனாக இருந்த தாவீது, கர்த்தருடைய நன்மையும் கிருபையையும் இணைக்கப்பட்டதின் நோக்கத்தை அறிந்திருந்தார். பயம், கவலை, சோதனை, சந்தேகம் போன்றவைகளும் நம்மைத் தொடரக்கூடியது. நிச்சயமாகவே தாவீதுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் கர்த்தருடைய நன்மையும் கிருபையையும் எப்போதும் நம்மை தொடர்ந்து பிடிக்கிறது என்று அவர் நம்பினார்.

தாவீது, “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்கீதம் 23:6) என்று மகிழ்ந்து களிகூறினார். இவைகளே நம்மைத் தொடர்ந்து வரக்கூடிய ஆச்சரியமான பரிசு. 

 

முழு உலகமும் பாடும்போது

1970களின் பிரபலமான விளம்பரம் ஒன்று ஒரு தலைமுறையையே ஊக்குவித்தது. கோகோ கோலாவின் “தி ரியல் திங்” விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் இசைக் குழுவினரால் உருவாக்கப்பட்டு, இறுதியில் ஒரு முழு நீளப் பாடலாக உருவெடுத்தது. அது உலகெங்கிலும் இருந்த இசை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால் ரோம் நகருக்கு வெளியே, ஒரு மலை உச்சியில் இளைஞர்கள் பாடிய அந்த பாடலின் தொலைக்காட்சி ஒளிபரப்பினை பலர் மறந்திருக்கமாட்டார்கள். தேனீக்களின் தரிசனம், பழங்களை ஈனும் மரங்கள், பாடலாசிரியரின் விருப்பத்தை உலகெங்கிலும் பறைசாற்றுவதற்கு அன்போடும், ஒற்றுமையுடனும் அப்பாடலை நாம் எதிரொலித்தோம். 

அப்போஸ்தலனாகிய யோவான், அந்த இலட்சியக் கனவைப் போன்ற ஒன்றை விவரிக்கிறார். அது மிகப் பெரியது. “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்” (வெளி. 5:13) பாடிய ஒரு பாடலை அவர் கற்பனை செய்தார். இந்த பாடலில் விசித்திரமாக எதுவும் இல்லை. ஆனால் நமக்கான பெரிய விலைக்கிரயத்தைக் கொடுத்தவருக்காய் பாடப்பட்டது. யுத்தம், மரணம் மற்றும் பாதிப்புகள் என்று நம் கண் முன்னே நிழலாடும் காரியங்களிலிருந்து அவருடைய அன்பின் தியாகம் நம்மை மேற்கொள்கிறது. 

ஆயினும் ஆட்டுக்குட்டியானவர்  நம் பாவத்தைச் சுமந்து, மரணத்தை ஜெயித்து, மரண பயத்தைப் போக்கவும், வானத்தையும் பூமியையும் முழு இணக்கத்துடன் பாட கற்றுக்கொடுக்கவும் எதிர்பார்த்தார்.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.